Wednesday 30 September 2015

சித்திரதொடர் சக்கரவர்த்தி திரு செல்லம்..! பகுதி -1

வணக்கங்கள் நண்பர்களே..!

என் சிறுவயதில் இருந்தே எனக்கு உறவுக்கார மாமா ஒருவர் ராஜாகாலத்துகதைகளையும், மாயாஜால கதைகளையும் 'ஆஆ' வென்று வாய்பிளந்து கேட்கும்படியாக, கனவுகளில் புது புது உலகங்கள் வரும்படியாக அசத்தலான கதைகள் சொல்வார். சரியாக ஒரு மாலைநேரத்தில்...ஒரு மாடிவீட்டில் கேட்கும் பிரிட்டிஷ் கால பெண்டுல கடிகாரத்தில் எழு 'டிங் டிங்' என ஒலிக்கும் மணிஓசைக்காக அவர் முன்பு ஒரு மழலைபட்டாளமே காத்திருக்கும்..!

மணி ஒலித்ததும் நாங்கள் 'ஏஏஏஏ' என கூச்சலிட, அவர் கதை சொல்லதுவங்குவார். அவரிடம் ஒருநாள் "மாமா நேற்று ஒரு பெரிய கடையில் ஒரு கலரில் ஒரு புஸ்தகம் பாத்தேன்..அதுல முக்கால் பேண்ட் போட்ட ஒரு பையன், முன்தலையுல மட்டும் ஸ்டைலா தூக்கிட்டு நிக்கிற முடி, அவன் கூடவே ஒரு வெள்ளையா ஒரு குட்டி நாய்..அப்புறம் புளு பனியன் போட்டுட்டு, தாடியும் தொப்பியும் போட்டொருவர்,ஒரேமாதிரி ரெண்டு பேர் கறுப்பு கோட்சூட்,குடை வெச்சிட்டு இருப்பாங்க...அந்த கதை உங்களுக்கு தெரியுமா மாமா..?" என கேட்டேன். அப்படி நான் கேக்க காரணம்...

மூன்றாம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன்...கிளாஸ்டீச்சர் "உங்கள்ல யாருக்கு நல்லா வரைய வரும் கை தூக்குங்க.." என கேட்க, உடனே நான்கு ஐந்து கைகள் உயர எழுந்ததுடன்..இன்னும் நான்கு ஐந்து கைகள் என் பக்கம் நீண்டு "இவன் நல்லா வரைவான் டீச்சர்..!" என குரல் எழுந்தது. 'அப்படியா' என டீச்சரின் கேள்விக்கு பதிலாக வகுப்பு தோழர்கள் அவர்களின் நோட்டில், நான் வரைந்ததை திறந்து காட்டி உறுதிபடுத்தினார்கள். எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது..."எதுல இதெல்லாம் வரைஞ்ச..? காட்டு..!" என கண்டிப்புடன் டீச்சர் கேட்க, "டீச்சர் டப்பா நிறைய கலர் கலரா பென்சில் வெச்சிருக்கான்.." என சட்டென்று என் தகரபெட்டியை பிடிங்கி ஒருவன் டீச்சரிடம் கொடுத்தான்.

அதில் நீட்டமும் குட்டையாக,தாறுமாறாய் சீவப்பட்ட...உருண்டையும், ஆறுபட்டையுமாக எல்லாம் கலந்த, என் சிறுவயது சேகரிப்பு கலர் பென்சில்களை டீச்சர் பார்த்துவிட்டு..."உங்க அப்பாவை நாளைக்கு வர சொல்லு..!" என கட்டளைஇட்டார். மறுநாள் பள்ளியை நெருங்கும்போது பயமும் அழுகையும் முட்டிக்கொண்டு வந்தது..! நான் மறைத்தாலும், உடன் படிக்கும் பையன் "அண்ணா உங்களை கிளாஸ்டீச்சர் வந்து பாக்க சொன்னாங்க வாங்க.." என வத்திவைத்தான்..! அதன்பின் என்னோட அப்பா பள்ளிக்குள் யாரை பார்த்தார், என்ன பேசினார் என தெரியவில்லை...மாலை வீடு திரும்பியதும் 'வா..!' என சைக்கிளில் அமரவைத்துகொண்டு எங்கோ அழைத்துசென்றார். என் முதல் நீண்ட சைக்கிள் பயணம் அது, சில நிமிட முடிவில் ஒரு பெரிய கட்டடத்தை அடைந்தோம்.

பளபளக்கும் பளிங்கு தரையும், பளிச்சென்ற சோடியம் வெளிச்சமும், உணவு பொருட்கள் முதல், எல்லா வீட்டு உபயோக பொருட்களும் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்ததை பார்த்து பிரமித்துபோனேன். நான் பார்த்த முதல் ஷாப்பிங் காம்ளெக்ஸ் அது..! அங்கு எனக்கு ஒரு வாட்டர் கலர் பாக்ஸ் வாங்கிகொடுத்தார் என் அப்பா..! அதுஎன்ன ? எதற்கு என்று எனக்கு அப்போது தெரியாது..அவரின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வேறு பகுதிக்கு போனேன், அங்கு கடையில் இரயில் பெட்டி போலவே வரிசையாக கடைமுழுதும் அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள். ஆஅ வென வைத்தகண் எடுக்காமல் அசையாமல் நின்றேன். என் அப்பாவின் கைகளை விட்டுவிட்டு கடைவாசலில் நிற்பதை பார்த்து உள்ளிருந்து, பாப் கட்டிங் செய்துகொண்டு ஒரு வடநாட்டு பெண்.."குட்ஈவ்னிங் மைபாய் கம்ன்சைடு...திஸ் இஸ் நியூ அரைவல்...யூ வாண்ட் ரீட் திஸ்..?" என வளவளப்பான காகிதத்தில், கண்ணை பறிக்கும் வண்ணத்தில் இருந்த, பெரிய சைஸ் புத்தகத்தை கையில் கொடுத்தார்..! அப்படியொரு புத்தகத்தை அப்பொழுதுதான் பார்க்கிறேன், அன்று பார்த்து  பிரமித்த படங்களை பற்றிதான் என் மாமாவிடம் கேட்டேன்..!அன்று நான் பார்த்தபுத்தகம் TIN TIN.


சிறுவர்கள் சாகசம் செய்யும் கதைகள்பக்கம் என் கவனம்திரும்பியுள்ளதை சரியாக கணித்து என் மாமா முதல் முறையாக மந்திராஜால கதைகளை தாண்டி, ஒரு அற்புதமான வாண்டுவை அறிமுகம் செய்தார்..! அன்று அவர் சொன்ன அந்த வாண்டுவின் சாகசம், சேட்டை, புத்திசாலித்தனம், சமயோஜிதம், துடுக்குத்தனம் பற்றிய கதைகள் இன்றும்கூட நினைவுகளில் தங்கியுள்ளன. அரைடவுசரில் வரும் அந்த வாண்டுவை ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்ற ஆசையை என் மாமாவிடம் "மாமா அந்த பையன் எப்படியிருப்பான் ? அவனை நான் பார்க்கவேண்டும், எனக்கு அவன் முகத்தை பாக்குனம் மாமா..." என கேட்டேன்..!

என் நச்சரிப்பைதாங்காமல், ஆர்வத்தை புரிந்துகொண்டு அவர் வீட்டு மாடிக்கு அழைத்து சென்று, அவருடைய கண்ணாடி போட்ட மர பீரோவில் இருந்து ஒரு பைண்டிங் எடுத்து விரித்து காட்டினார்..! நான்...நான் பார்த்த காட்சி...தோளில்கிரிக்கெட் பேட், கையில் பந்துடன் அரைடவுசரில் என்னைபார்த்து சிரித்த அந்த பொடியன் முகம் என்னவொரு வசீகரம்..! அந்த பொடியன் பெயர் பலே பாலு..! அதன் ஓவியர் செல்லம்..!





அன்று நான் உணர்ந்தது பலே பாலு என்னும் கற்பனை தோழனை மட்டுமல்ல...ஓவியர் செல்லம் அவர்களின் ஓவிய வளைவுகளையும் தான்..! டின்டின் போன்ற மேலைநாட்டு சிறுவர்கள் மட்டும் தான் ஸாகசம் செய்யும் சக்திபடைத்தவர்களா..? என்னை போன்ற கீழைநாட்டு சிறுவர்கள் ஸாகசம் செய்வது முடியாதா..? என்னும் அன்றைய அரைடவுசரில் வளம்வந்த தமிழக சிறுவர்களின் பிஞ்சு ஏக்கத்தை, உலகதரத்தில் வரைந்து, ஒட்டுமொத்த சிறுவர்களையும் சுண்டியிழுக்கும் ஓவியங்களை வரைந்தவர் இப்பொழுது நம்மிடையே இல்லை..!

திரு செல்லம் போட்டோ: கிங் விஸ்வா

எனக்கு அமரர் ஓவியர் செல்லம் அவர்களுடைய பிறப்பு,பின்னணி பற்றிய எந்த தகவலும் தெரியாது. ஆனால் அவரின் படைப்புகள் ஓரளவு அத்துபடி, அவரின் ஓவியத்தில் காதல் கொண்டு...நான் சேகரித்து வைத்தவைகளில் இருந்து, என் பார்வையில் அவரின் கைவண்ணத்தை கொஞ்சம் வரிசைவாரியாக இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்..! மறைக்கப்பட்ட ஓவியர் பற்றிய, புதைந்து போன தகவல்களை கொஞ்சமேனும் மீட்டெடுக்கும் ஒரு சின்ன முயற்சி மட்டுமல்ல, அவரின் மறைவுக்கு என்னால் முடிந்த சின்ன கௌரவபடுத்தலும் கூட..!

என்னிடமுள்ள கொஞ்சம் சேகரிப்பில் கிடைத்த தகவல்களை, வருடங்கள் வாரியாக வரிசைபடுத்தி பார்த்ததில்...குமுதம் வார பத்திரிக்கையில் மறைந்த ஓவியர் செல்லத்தின் கைவண்ணம் 1967 ம் வருடத்தில் குட்டி குட்டி நகைச்சுவை கதாபாத்திரங்களை உருவாக்கி, அன்றைய கூட்டுகுடும்ப கலாட்டாக்களை இரண்டு மூன்று சிலாட்டாக வரைந்துள்ளார். ஆனால் அவரின் பெயர் எங்கும் போடவில்லை.அதற்கு காரணமாக நான் கணிப்பது...அவர் அந்த காலகட்டத்தில் 'முரசொலி' பத்திரிக்கையில் பணிபுரிந்ததால், [நன்றி:கிங் விஸ்வா] பெயர் போட்டால் ஏதும் பிரச்சனை வருமோ என தவிர்த்திருக்கலாம்..!

இருப்பினும்கூட அவர் ஒரு நுணுக்கமான வழிமுறையை கையாண்டார். அவரின் சித்திரம் எந்த தேதியில் வெளிவருகிறதோ...அந்த தேதியையே அவர் அடையாளமாக மாற்றினார்.




அந்த காலகட்டத்தில் மாடஸ்டி பிளைஸி, வேதாளர் போன்ற மேற்கத்திய சித்திரக்கதை தொடர்களை குமுதம் வெயிட்டு கொண்டிருந்தது. ஓவியர் செல்லம் கைவண்ணத்தின் திறமையை சரியாக கணித்து, சர்வதேச தரத்தை வெளிக்காட்ட, அவருக்கு தொடர்ந்து 70 வாரங்கள் சித்திரக்கதை தொடர் வரைய குமுதம் வாய்ப்பளித்தது. முதல் கட்டமாக கிட்டத்தட்ட பத்து மாதங்கள் 'கடல் கன்னி' என்ற தொடர், ஓவியர் & கதாசிரியர் பெயர்கள் குறிப்பிடாமல் துவங்கப்பட்டது..!




இந்த துப்பறியும் 'க்வாக்' சுந்தரம் குமுதம் தொடரை நண்பர் JCS ஜானி தனது ப்ளாக்கில் சில பக்கங்களை பதிவேற்றியுள்ளார்..! அதை பார்க்க...இங்கே 'கிளிக்'

பெயரிடப்படாத ஓவியர் செல்லத்தின் நகைசுவை துணுக்குகள் போலவே, அதே குமுதத்தில் அதே காலகட்டத்தில் மற்றொரு ஓவியரும் கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு வரைந்தார்..!



அந்த இன்னொரு ஓவியர் யார் என நம்மால் கண்டுபிடிக்க சிரமமாக இருந்தாலும்கூட...ஒரு சிறுவர் உலகஇலக்கிய ஜாம்பவான் எழுத்தாளர், சிறுவர்களை மயக்கும் ஓவியர் செல்லத்தின் வளைவுகளை மிக சரியாக இனம்கண்டு, தொடர்ந்து அவரை கவனித்து வந்து, சரியான சந்தர்ப்பத்தில் செல்லம் என்ற பெயருடன் அவரின் திறமையை இந்த உலகிற்கு அறிமுகபடுத்தினார்..!

ஓவியர்:செல்லம் என இந்த உலகிற்கு அறிமுகம் செய்த,சிறுவர் இலக்கிய ஜாம்பவான் வாண்டுமாமா அவர்கள்..! அப்படி அறிமுகம் துவங்கிய ஆண்டு 1972. இந்த ஆண்டை கொண்டாட்ட ஆண்டாக அறிவிக்கலாம், ஏனென்றால் முத்துகாமிக்ஸ் என்னும் மேற்கத்திய படைப்புகள் அணிவகுப்பு ஒருபுறம் என்றால்... தமிழர்களின் படைப்புகள் தாங்கிய கோகுலம் சிறுவர் இதழ் துவக்கம் மறுபுறம்..! 


இரண்டு பக்கத்தில் ஒரு குட்டி குறும்பு என பலே பாலுவின் ஹாஷ்யங்களை திரு செல்லம் ஓவியத்தின் மூலமாக, ஒரு சர்வதேச தரத்தில் உயிருட்டி, இன்றுவரையில் எல்லோர் மனதிலும் மறக்காத பாத்திரமாக உருவாக்கி மனங்களை கொள்ளைகொண்டார்..! 




வாண்டுமாமாவின் கற்பனை குதிரையின் புது பாய்ச்சலைவிட, ஓவியர் செல்லத்தின் ஓவியப் பாய்ச்சல் படு அட்டகாமாக வளைந்து, நெளிந்து மாயங்கள் செய்து மயக்கியது..! அந்த மயக்கி தள்ளிய ஓவியத்தை நீங்களே பார்த்து கொள்ளுங்களேன்..!

அவரின் கைகளில் மனித உருவங்கள் மட்டுமல்ல...எல்லா வகை ஜீவராசிகளும் சாகசங்கள் செய்து ஜாலம் செய்தன என்றால் அது மிகையல்ல..!அதற்கு 'நந்து சுந்து மந்து..!' என்னும் சித்திரதொடர் நல்ல உதாரணம்..!





எழுபதுகளின் ஆரம்பத்தில் இரும்புக்கை மாயாவிக்கு எப்படி ஒருபுறம் ரசிகர்கள் உருவானார்களோ..அதேபோலவே மறுபுறம் பலே பாலுவிற்கு இசிகர்கள் உருவானார்கள் என்பது நிதர்சனம்..! பலே பாலுவை வித்தியாசமான சிலாகிக்கும் கதைகளின் மூலமாக வாண்டுமாமா எழுத...ஓவியர் செல்லம் எகிறவைக்கும் உயிருட்டத்துடன் வரைந்து தள்ளினார்..! அப்படி வந்தவை தான் 'பலேபாலுவும் பாட்டில் பூதமும்..!'




இந்த கதையை படித்தவர்கள் வீட்டில் இருக்கும் ஒரு பழைய ஜாடியை ஒருமுறையேனும் திறந்துபார்த்திருப்பர்கள்..! அவ்வளவு சந்தோசங்களை, ஏக்கங்களை உண்டாகும் ஒரு கதை..! வாண்டுமாமாவையும் செல்லத்தையும் சித்திரக்கதை பிரியர்கள் தங்கள் மனதில் கொடுத்த இடம் வேறுயாருக்கும் கொடுப்பார்களா என்பது சந்தேகமே..!

ஓவியர் செல்லத்தின் அடுத்தகட்ட  பயணத்தை வரும் அடுத்த பதிவில் சொல்கிறேன். இங்கு ஒரு கருத்தை முன்வைக்க தோன்றுகிறது. உலகமயமாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் நல்லவைகளை எந்த நாட்டவை என்றாலும்கூட தேடிபிடித்து, ரசிப்பது வரவேற்க்கபடவேண்டியவையே..! வெளிநாட்டு படைப்புகளை வெறியாய் ரசிக்க காட்டும் ஆர்வத்தில் கொஞ்சமேனும்,  நம் வாழ்கை முறையையும், கலாசாரத்தையும் மையமாக வைத்து வந்த இப்படிபட்ட படைப்பாளிகளையும், படைப்புகளையும் நாம் மறப்பதும், புதைந்துவிட விடுவதும், புதுப்பிக்க தவறுவதும் பார்க்க  வேதனையாக உள்ளது..!

ஏழரை கோடி தமிழர்களில், தமிழ் காமிக்ஸ் உலகம் சில ஆயிரம் தீவிர இரசிகர்களை மட்டுமே கொண்டு பலவீனமாக உள்ளது..பலவீனமாக உள்ளது.. என வேதனை தெரிவிக்கும் நம்மிடையே...சில நூறு பேர்களிடமாவது இந்த மாபெரும் கலைஞரின் கைவண்ணம் மீதமிருகிறதா என்பதே என் கேள்வி..!!!  

உங்கள் எண்ணங்களின் பகிர்வு தான்...வரும் பதிவின் வேகத்தையும் ஆழத்தையும் தீர்மானிக்கும்..காத்திருக்கும்...

நட்புடன்
மாயாவி.சிவா


39 comments:

  1. அருமை.!இரண்டாம் பாகம் எப்போது.?

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போலவே உங்கள் முதல் வருகை...! நன்றிகள் கார்த்திக்..!

      Delete
  2. அட்டகாசம்.!
    அடுத்த பாகத்தையும் விரைவில் எதிர்பார்க்கிறேன் நண்பரே.!

    ReplyDelete
    Replies
    1. @ கிட் ஆர்ட்டின் கண்ணன்

      இது ஒரு ஓவிய சக்கரவர்த்தியின் வழித்தடம் பற்றியது என்பதால்...கொஞ்சம் கவனமாகவே தகவல்களை சரிபார்த்து பதிவிடுகிறேன்..!

      Delete
  3. அருமையான பதிவு சார் ...பலே பாலு மறக்க முடியாத படைப்பு....தங்களின் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் ...

    ReplyDelete
    Replies
    1. @ தலீவரே

      உங்களை இரண்டு வாரம் காக்கவைக்கும்படி ஆகும் போல இருக்கே..! [ பலேபாலுவின் தலைசொறியும் படங்கள் நான்கு..ஹீ..ஹீ..]

      Delete
  4. ///வெளிநாட்டு படைப்புகளை வெறியாய் ரசிக்க காட்டும் ஆர்வத்தில் கொஞ்சமேனும், நம் வாழ்கை முறையையும், கலாசாரத்தையும் மையமாக வைத்து வந்த இப்படிபட்ட படைப்பாளிகளையும், படைப்புகளையும் நாம் மறப்பதும், புதைந்துவிட விடுவதும், புதுப்பிக்க தவறுவதும் பார்க்க வேதனையாக உள்ளது..! ///

    அருமை அருமை! மொத்தப் பதிவுமே!

    இயல்பான எழுத்துநடையும் மாயாவிக்கு சாத்தியமே என உணரவைத்துள்ளது!

    ஓவியர் செல்லம் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது!

    ReplyDelete
    Replies
    1. @ இத்தாலி விஜய்

      சாத்தியமாக்கியதே நீங்கள் தானே..! நீங்கள் அவ்வளவு சொல்லியும் மாறவில்லை என்றால்..என்பாடு திரு செல்லம் வரைந்த ஓவியங்கள் போலவே ஹாஷ்யமாகிவிடாதா...:-)))

      Delete
  5. அற்புதமான கால வெள்ளத்தை வென்ற பதிவு சார்... சூப்பர்.. வாழ்த்துகள்..... இதை தவிர வேறு எதுவும் சொல்ல தெரியாத நிலை, மிக மிக லேட்டாக காமிக்ஸ் படிக்க வந்ததால் இதுபோன்ற லோக்கல் போட்டிகளை பார்க்கும் வாய்ப்பு நஹி....ஸ்ட்ரெயிட்டா கவுன்டி ஆட்டங்கள் தான் நான் பார்த்தவை. உங்களை போன்ற நண்பர்கள் சிலாகிக்கும்போது சற்றே பொறாமை எட்டி பார்க்கிறது....சட்டு புட்டுனு அடுத்தடுத்த பார்ட்களை போடுங்கள், ஏதோ தகவலாவது தெரிந்து கொள்கிறேன் சார்...

    ReplyDelete
    Replies
    1. @ சேலம் இரவுகழுகார்

      கிட்டதட்ட முப்பது வருட சேகரிப்புகள்..! இப்படி சேத்துவைக்கும் மடையன் என்னைபோல யாரும் இருக்கமாட்டார்கள்..இது என்ன ரசனையோ..? என்ன ஆசையோ..? என பலமுறை நொந்துபோயிருக்கிறேன்..! உண்மையில் சொல்லவேண்டுமென்றால்..விரல் விட்டு எண்ணக்கூடியவர்களிடமே செல்லம் அவர்களின் படைப்புகள் உள்ளன. ஏதோ இரண்டு என்னிடம் தங்கியுள்ளது, மற்றபடி பொறாமைபடும் அளவிற்கு ஒன்றுமில்லை டெக்ஸ்..!

      அப்புறம் ஒரு உதவி...என் சிறுவயதில் நான் வியந்து பார்த்த அந்த ஷாப்பிங் காம்ளெக்ஸ் 'சாமுண்டி சூப்பர் மார்கெட்..! அந்த புத்தகக்கடை என குறிப்பிட்டது ஒரு லைப்ரரி, அது இன்னும் இயங்கிக்கொண்டுள்ளது. புரபசனல் கூரியருக்கு பக்கத்து கடை, எனக்கு அந்த கடையும், சாமுண்டி சூ.மா.வும் போட்டோகள் எடுத்து அனுப்ப முடியுமா இரவுகழுகாரே..!!!

      Delete
    2. இன்று , நீங்கள் மட்டுமல்ல சேலமே பார்த்து வியந்த அந்த சாமுண்டி காம்ளக்ஸ் பொழிவிழந்து.....வியாபாரமத்தை இழந்து...இடிக்கப்பட்டு கார் டிஷ்ரிபியூட்டர்ஸ் வருது.....காலத்தின் அகோரம்.....சரி போட்டோக்கள் எடுத்து அனுப்புகிறேன் மாயாவி சார்...

      Delete
  6. பலே மாயாவி!

    இந்த கதைகளை யாராவுது மறுபதிப்பித்தால் நன்றாய் இருக்கும்!

    ஹும்ம்ம்ம்ம்ம்ம்ம்

    ReplyDelete
    Replies
    1. @ சத்யா

      நண்பர் கிங் விஸ்வா வாண்டுமாமாவின் படைப்புகளை வண்ணத்திலேயே வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்..! அவருக்கு வாண்டுமாமா என்றால் அவ்வளவு பிரியம் விடவே மாட்டார், எப்படியும் ஒருநாள் கொண்டுவந்துவிடுவார்..!

      Delete
    2. @ மாயாவி, காத்திருப்போம், King வேறு புத்தகங்கள் வெளியிட்டுள்ளாரா??

      Delete
    3. இதுவரையில் இல்லை..சத்யா..! தற்சமயம் வானதி மறுபதிப்புகள் வந்துள்ள வாண்டுமாமா சித்திரக்கதைகள் வேறு, பலேபாலுவின் கதைகள் என்ற தகவலை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்..!

      Delete
  7. anaiththuk kathaigalaiyum marupathippu seythalum mikka magilchiyaaga irukkum.

    ReplyDelete
    Replies
    1. @ ஜான்

      இந்த டைலாக் உங்களிடம் நான் சொல்லவேண்டியது...ஹாஹா..ம்...!

      Delete
  8. அட அட அட
    ஆரம்பமே அதகளம் பண்றீறய்யா நீவிர்....

    செல்லம் / வாண்டுமாமா பற்றி எனக்கு தெரியாத விஷயங்களை இப்பதிவின் தொடர்ச்சிகளில் தெரிந்து கொள்ள ஆவலாய் உள்ளேன் :)

    வாழ்த்துகளய்யா
    உம் எழுத்துநடைக்கு

    ReplyDelete
    Replies
    1. @ டெக்ஸ் சம்பத்

      என்னைவிட அருமையான தகவல்களை நண்பர் கிங் விஸ்வா வைத்துள்ளார். அதை பத்திரிக்கையில் வெளியிடுவார் என நினைக்கிறேன், அதை படிக்க நானும் ஆவலாய் உள்ளேன் :)

      Delete
  9. @சேலம் Tex விஜயராகவன் & John Simon C

    கோகுலம் வலையில் 12 issues for 180. ஒன்லி ஆன்லைன் reading available. 1972 முதற்கொண்டு உள்ளது, ப்ரிண்ட் எடுக்கவும் வழி உள்ளது

    @E.Vijay belated வாழ்த்துக்கள், above information என் happy birthday gift to you

    ReplyDelete
    Replies
    1. @ சத்யா

      இத்தாலி விஜய்க்கு எல்லா இடத்திலும் வாழ்த்துக்கள் வருவது பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது..! மனிதர் அன்பான எழுத்துக்களாலும், அமைதியான பழக்கத்தின் மூலமாகவும் எவ்வளவு நண்பர்களின் மதிப்பை பெற்றிருக்கிறார் என கண்கூடாக பார்க்கும்போது, அவரின் நெருங்கிய நட்பு கிடைத்தை நினைக்கையில், நிறைவாக உள்ளது நண்பரே..!

      Delete
  10. அருமை..Mayavi Sir...
    பலே பாலு கதை படித்தது நியாபகம் இல்லை. ஆனால் பாட்டில் பூதத்தில் வரும் பூதத்தின் ஓவியம் நினைவில் உள்ளது... உங்கள் பதிவு, பழைய நினைவுகளை மீட்டு எடுத்து விட்டது..

    ReplyDelete
    Replies
    1. ///ஏழரை கோடி மக்களில் சில ஆயிரம் தீவிர ரசிகர்கள் கொண்டு பலவீனமாகய உள்ளது.!///

      உண்மையான வார்த்தை.!
      அருமையான பதிவு.!எழத்தில் நிறைய மாற்றங்கள், சூப்பராக உள்ளது.

      Delete
    2. @ Dasu Bala

      பலே பாலுவின் மொத்தசித்திரகதைகளும் 380 பக்கங்களுடன் திருவரசு புத்தக நிலையம்...டிசம்பர் 2008ல் வெளியிட்டது..!விலை 150 தான். கிடைக்கிறதா என முயற்சியுங்கள்..!

      Delete
    3. இது வானதி பதிப்பகம், சென்னையில் கிடைக்கிறது

      Delete
    4. @Tex Sampath

      வானதி பதிப்பகம் / திருவரசு புத்தக நிலையம் = இரண்டு ஆனால் ஒன்று

      Current status = Out of print :-(

      Delete
  11. மாயாவி சார்.!மாடஸ்டி கதை குமுதத்தில் தொடராக வந்ததா.? என்ன கதை சார்.?லயன் அல்லது ராணியில் வந்த கதையா.?

    ReplyDelete
    Replies
    1. @ மடிப்பாக்கம் வெங்கடேஸ்வரன்

      கறுப்பு முத்து என்ற பெயரில் வந்தது...1969 வருடம் குமுதத்தில் தொடராக வந்தது..! அம்மையாரின் முதல் தமிழ் பிரவேசம் பார்க்கவேண்டுமெனில்..காமிக்ஸ் புரட்சி எங்கே? எப்போது? யாரால்? என்ற எனது முந்தைய பதிவை பாருங்கள்..அவசரமாக பார்க்க...இங்கே'கிளிக்'
      அந்த தொடரின்..ஒர்ஜினல் முதல் பக்கம் இப்போதைக்கு என்னிடம் மட்டுமே உள்ளது தான் சோகம்..! :(

      Delete
  12. புலி இதுக்குத்தான் பதுங்கியதோ.. படிச்சுட்டு வரேன்

    ReplyDelete
    Replies
    1. @ மகேந்திரன்

      கிட்டதட்ட சரியாகவே சொன்னீர்கள் நண்பரே..! தொடர் சித்திர சக்கரவர்த்தி திரு செல்லம் மறைவுக்கு பின் தான்...அவரின் படைப்புகள் தினமும் நினைவுகளாக, நினைவுக்கு வர தொடங்கின. சின்னவயதில் என்னை வசீகரித்த கலைஞரின் படைப்புகளை ஒரு மாதம் கொஞ்சம் தவமிருந்து, ஆழமாக பதிவிடவேண்டும்..இதை தாண்டி நான் அவருக்கு செய்யும் மரியாதை வேறென்னவாக இருக்கமுடியும்..? அதற்கு கொஞ்சம் தனிமையும் முழு ஈடுபாடும் தேவைபட்டது. காமிக் லவர் அதற்கு சந்தர்ப்பம் வழக்கினார்..! அதை நான் பயன்படுத்தி கொள்கிறேன்..!

      Delete
    2. படித்து முடித்து விட்டேன். அருமை. அருமை. நிறைய பேருக்கு தெரியாத தகவல்களை வெளிக் கொணர்ந்திருக்கிறீர்கள். உங்களிடம் (செனா ஆனா, மற்றும் பல நண்பர்களிடம்) பிடித்ததே நிறைய விஷயங்கள் தெரிந்தாலும் தன்னடக்கமாகவும், கனிவாகவும் , சாதாரண பக்கத்துக்கு வீட்டு பையன்கள் (?!) போல இயல்பாகவும் இருப்பது. இப்படியே இருங்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.

      Delete
  13. மாயாவிஜி ....fantastic article .....சிறுவயதில் கதைகள் ஓகேதான் ...ஆனால் நாமே படிக்கும் வயதில் சித்திரங்களே பிரதானம் .
    அம்புலிமாமாவில் வரும் ,வந்த படங்கள் இப்போதும் நினைவில் உள்ளன ...

    பலே பாலுவும் பாட்டிலில் பூதமும் ,நந்து சுந்து மந்து கதைகள் ஞாபகம் இல்லாது போயினும் படங்கள் மனதில் தெளிவாக பதிந்து இருப்பது ஓவியரின் மகத்தான வெற்றி அன்றி வேறென்ன ?

    ஓவியர் செல்லம் அவர்களின் கலைத்திறனை உயர்வித்து அவர் புகழுரைக்கும் இந்த கட்டுரைக்கு என் வாழ்த்துக்கள் .....!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. @ செல்வம் அபிராமி

      ஓவியர் செல்லம் மட்டும் ஐரோபியராக இருந்திருந்தால்..அவரின் கைவண்ணம், டின் டின், லக்கிலுக்,ஆஸ்டின் அன் ஓப்லிஸ், சிக்பில் போன்ற வரிசையின் ஒரு ஓவியராக நிச்சயம் இருந்திருப்பார்..அவ்வளவு திறமைசாலி..! வெள்ளை தாளும், கறுப்பு மாசியும், சொற்ப்ப தொகையும், சில மணிநேர அவகாசமும் தந்த தமிழகத்தில் அவர் திறமை போற்றபடாமல்அணைந்தே போய்விட்டார்..!

      Delete
  14. From murugan,
    Hats off mayavi for this wonderful post.

    ReplyDelete
  15. வணக்கம் மாயாவி ஜி!
    நான் முதன்முதலில் கோகுலம் புத்தகத்தை 1987 ல் (என்று நினைக்கிறேன் ) எங்கள் ஊர் நூலகத்தில்தான் பார்த்தேன். அதில்தான் பலே பாலுவையும் முதலில் பார்த்து படித்தேன். அது ஒரு 2 அல்லது 3 வருடமே தொடர முடிந்தது. அதற்கு பிறகு இன்று உங்கள் பதிவின்மூலமே அந்த கதைகளையும் ஓவியங்களையும் காண/படிக்க முடிகிறது.
    மிக்க நன்றி அறிய விசயங்களை பகிர்ந்து கொண்டதற்க்கு.
    வாழ்த்துக்களும், பாராட்டுகளூம் உங்கள் உழைப்புக்கும், காமிக்ஸ் காதலுக்கும்!!!

    காத்திருக்கிறேன் தொடர்ச்சிக்காக....

    - ஹசன்

    ReplyDelete
  16. .அருமை பலே பாலு பாட்டில் பூதம் கதை மீண்டும் படங்களை பார்க்க வைத்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  17. ஓவியர் மாலாவை பற்றி???

    ReplyDelete