Wednesday 30 September 2015

சித்திரதொடர் சக்கரவர்த்தி திரு செல்லம்..! பகுதி -1

வணக்கங்கள் நண்பர்களே..!

என் சிறுவயதில் இருந்தே எனக்கு உறவுக்கார மாமா ஒருவர் ராஜாகாலத்துகதைகளையும், மாயாஜால கதைகளையும் 'ஆஆ' வென்று வாய்பிளந்து கேட்கும்படியாக, கனவுகளில் புது புது உலகங்கள் வரும்படியாக அசத்தலான கதைகள் சொல்வார். சரியாக ஒரு மாலைநேரத்தில்...ஒரு மாடிவீட்டில் கேட்கும் பிரிட்டிஷ் கால பெண்டுல கடிகாரத்தில் எழு 'டிங் டிங்' என ஒலிக்கும் மணிஓசைக்காக அவர் முன்பு ஒரு மழலைபட்டாளமே காத்திருக்கும்..!

மணி ஒலித்ததும் நாங்கள் 'ஏஏஏஏ' என கூச்சலிட, அவர் கதை சொல்லதுவங்குவார். அவரிடம் ஒருநாள் "மாமா நேற்று ஒரு பெரிய கடையில் ஒரு கலரில் ஒரு புஸ்தகம் பாத்தேன்..அதுல முக்கால் பேண்ட் போட்ட ஒரு பையன், முன்தலையுல மட்டும் ஸ்டைலா தூக்கிட்டு நிக்கிற முடி, அவன் கூடவே ஒரு வெள்ளையா ஒரு குட்டி நாய்..அப்புறம் புளு பனியன் போட்டுட்டு, தாடியும் தொப்பியும் போட்டொருவர்,ஒரேமாதிரி ரெண்டு பேர் கறுப்பு கோட்சூட்,குடை வெச்சிட்டு இருப்பாங்க...அந்த கதை உங்களுக்கு தெரியுமா மாமா..?" என கேட்டேன். அப்படி நான் கேக்க காரணம்...

மூன்றாம் வகுப்பு படிக்கும்போது என நினைக்கிறேன்...கிளாஸ்டீச்சர் "உங்கள்ல யாருக்கு நல்லா வரைய வரும் கை தூக்குங்க.." என கேட்க, உடனே நான்கு ஐந்து கைகள் உயர எழுந்ததுடன்..இன்னும் நான்கு ஐந்து கைகள் என் பக்கம் நீண்டு "இவன் நல்லா வரைவான் டீச்சர்..!" என குரல் எழுந்தது. 'அப்படியா' என டீச்சரின் கேள்விக்கு பதிலாக வகுப்பு தோழர்கள் அவர்களின் நோட்டில், நான் வரைந்ததை திறந்து காட்டி உறுதிபடுத்தினார்கள். எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது..."எதுல இதெல்லாம் வரைஞ்ச..? காட்டு..!" என கண்டிப்புடன் டீச்சர் கேட்க, "டீச்சர் டப்பா நிறைய கலர் கலரா பென்சில் வெச்சிருக்கான்.." என சட்டென்று என் தகரபெட்டியை பிடிங்கி ஒருவன் டீச்சரிடம் கொடுத்தான்.

அதில் நீட்டமும் குட்டையாக,தாறுமாறாய் சீவப்பட்ட...உருண்டையும், ஆறுபட்டையுமாக எல்லாம் கலந்த, என் சிறுவயது சேகரிப்பு கலர் பென்சில்களை டீச்சர் பார்த்துவிட்டு..."உங்க அப்பாவை நாளைக்கு வர சொல்லு..!" என கட்டளைஇட்டார். மறுநாள் பள்ளியை நெருங்கும்போது பயமும் அழுகையும் முட்டிக்கொண்டு வந்தது..! நான் மறைத்தாலும், உடன் படிக்கும் பையன் "அண்ணா உங்களை கிளாஸ்டீச்சர் வந்து பாக்க சொன்னாங்க வாங்க.." என வத்திவைத்தான்..! அதன்பின் என்னோட அப்பா பள்ளிக்குள் யாரை பார்த்தார், என்ன பேசினார் என தெரியவில்லை...மாலை வீடு திரும்பியதும் 'வா..!' என சைக்கிளில் அமரவைத்துகொண்டு எங்கோ அழைத்துசென்றார். என் முதல் நீண்ட சைக்கிள் பயணம் அது, சில நிமிட முடிவில் ஒரு பெரிய கட்டடத்தை அடைந்தோம்.

பளபளக்கும் பளிங்கு தரையும், பளிச்சென்ற சோடியம் வெளிச்சமும், உணவு பொருட்கள் முதல், எல்லா வீட்டு உபயோக பொருட்களும் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டிருந்ததை பார்த்து பிரமித்துபோனேன். நான் பார்த்த முதல் ஷாப்பிங் காம்ளெக்ஸ் அது..! அங்கு எனக்கு ஒரு வாட்டர் கலர் பாக்ஸ் வாங்கிகொடுத்தார் என் அப்பா..! அதுஎன்ன ? எதற்கு என்று எனக்கு அப்போது தெரியாது..அவரின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வேறு பகுதிக்கு போனேன், அங்கு கடையில் இரயில் பெட்டி போலவே வரிசையாக கடைமுழுதும் அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள். ஆஅ வென வைத்தகண் எடுக்காமல் அசையாமல் நின்றேன். என் அப்பாவின் கைகளை விட்டுவிட்டு கடைவாசலில் நிற்பதை பார்த்து உள்ளிருந்து, பாப் கட்டிங் செய்துகொண்டு ஒரு வடநாட்டு பெண்.."குட்ஈவ்னிங் மைபாய் கம்ன்சைடு...திஸ் இஸ் நியூ அரைவல்...யூ வாண்ட் ரீட் திஸ்..?" என வளவளப்பான காகிதத்தில், கண்ணை பறிக்கும் வண்ணத்தில் இருந்த, பெரிய சைஸ் புத்தகத்தை கையில் கொடுத்தார்..! அப்படியொரு புத்தகத்தை அப்பொழுதுதான் பார்க்கிறேன், அன்று பார்த்து  பிரமித்த படங்களை பற்றிதான் என் மாமாவிடம் கேட்டேன்..!அன்று நான் பார்த்தபுத்தகம் TIN TIN.


சிறுவர்கள் சாகசம் செய்யும் கதைகள்பக்கம் என் கவனம்திரும்பியுள்ளதை சரியாக கணித்து என் மாமா முதல் முறையாக மந்திராஜால கதைகளை தாண்டி, ஒரு அற்புதமான வாண்டுவை அறிமுகம் செய்தார்..! அன்று அவர் சொன்ன அந்த வாண்டுவின் சாகசம், சேட்டை, புத்திசாலித்தனம், சமயோஜிதம், துடுக்குத்தனம் பற்றிய கதைகள் இன்றும்கூட நினைவுகளில் தங்கியுள்ளன. அரைடவுசரில் வரும் அந்த வாண்டுவை ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்ற ஆசையை என் மாமாவிடம் "மாமா அந்த பையன் எப்படியிருப்பான் ? அவனை நான் பார்க்கவேண்டும், எனக்கு அவன் முகத்தை பாக்குனம் மாமா..." என கேட்டேன்..!

என் நச்சரிப்பைதாங்காமல், ஆர்வத்தை புரிந்துகொண்டு அவர் வீட்டு மாடிக்கு அழைத்து சென்று, அவருடைய கண்ணாடி போட்ட மர பீரோவில் இருந்து ஒரு பைண்டிங் எடுத்து விரித்து காட்டினார்..! நான்...நான் பார்த்த காட்சி...தோளில்கிரிக்கெட் பேட், கையில் பந்துடன் அரைடவுசரில் என்னைபார்த்து சிரித்த அந்த பொடியன் முகம் என்னவொரு வசீகரம்..! அந்த பொடியன் பெயர் பலே பாலு..! அதன் ஓவியர் செல்லம்..!





அன்று நான் உணர்ந்தது பலே பாலு என்னும் கற்பனை தோழனை மட்டுமல்ல...ஓவியர் செல்லம் அவர்களின் ஓவிய வளைவுகளையும் தான்..! டின்டின் போன்ற மேலைநாட்டு சிறுவர்கள் மட்டும் தான் ஸாகசம் செய்யும் சக்திபடைத்தவர்களா..? என்னை போன்ற கீழைநாட்டு சிறுவர்கள் ஸாகசம் செய்வது முடியாதா..? என்னும் அன்றைய அரைடவுசரில் வளம்வந்த தமிழக சிறுவர்களின் பிஞ்சு ஏக்கத்தை, உலகதரத்தில் வரைந்து, ஒட்டுமொத்த சிறுவர்களையும் சுண்டியிழுக்கும் ஓவியங்களை வரைந்தவர் இப்பொழுது நம்மிடையே இல்லை..!

திரு செல்லம் போட்டோ: கிங் விஸ்வா

எனக்கு அமரர் ஓவியர் செல்லம் அவர்களுடைய பிறப்பு,பின்னணி பற்றிய எந்த தகவலும் தெரியாது. ஆனால் அவரின் படைப்புகள் ஓரளவு அத்துபடி, அவரின் ஓவியத்தில் காதல் கொண்டு...நான் சேகரித்து வைத்தவைகளில் இருந்து, என் பார்வையில் அவரின் கைவண்ணத்தை கொஞ்சம் வரிசைவாரியாக இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்..! மறைக்கப்பட்ட ஓவியர் பற்றிய, புதைந்து போன தகவல்களை கொஞ்சமேனும் மீட்டெடுக்கும் ஒரு சின்ன முயற்சி மட்டுமல்ல, அவரின் மறைவுக்கு என்னால் முடிந்த சின்ன கௌரவபடுத்தலும் கூட..!

என்னிடமுள்ள கொஞ்சம் சேகரிப்பில் கிடைத்த தகவல்களை, வருடங்கள் வாரியாக வரிசைபடுத்தி பார்த்ததில்...குமுதம் வார பத்திரிக்கையில் மறைந்த ஓவியர் செல்லத்தின் கைவண்ணம் 1967 ம் வருடத்தில் குட்டி குட்டி நகைச்சுவை கதாபாத்திரங்களை உருவாக்கி, அன்றைய கூட்டுகுடும்ப கலாட்டாக்களை இரண்டு மூன்று சிலாட்டாக வரைந்துள்ளார். ஆனால் அவரின் பெயர் எங்கும் போடவில்லை.அதற்கு காரணமாக நான் கணிப்பது...அவர் அந்த காலகட்டத்தில் 'முரசொலி' பத்திரிக்கையில் பணிபுரிந்ததால், [நன்றி:கிங் விஸ்வா] பெயர் போட்டால் ஏதும் பிரச்சனை வருமோ என தவிர்த்திருக்கலாம்..!

இருப்பினும்கூட அவர் ஒரு நுணுக்கமான வழிமுறையை கையாண்டார். அவரின் சித்திரம் எந்த தேதியில் வெளிவருகிறதோ...அந்த தேதியையே அவர் அடையாளமாக மாற்றினார்.




அந்த காலகட்டத்தில் மாடஸ்டி பிளைஸி, வேதாளர் போன்ற மேற்கத்திய சித்திரக்கதை தொடர்களை குமுதம் வெயிட்டு கொண்டிருந்தது. ஓவியர் செல்லம் கைவண்ணத்தின் திறமையை சரியாக கணித்து, சர்வதேச தரத்தை வெளிக்காட்ட, அவருக்கு தொடர்ந்து 70 வாரங்கள் சித்திரக்கதை தொடர் வரைய குமுதம் வாய்ப்பளித்தது. முதல் கட்டமாக கிட்டத்தட்ட பத்து மாதங்கள் 'கடல் கன்னி' என்ற தொடர், ஓவியர் & கதாசிரியர் பெயர்கள் குறிப்பிடாமல் துவங்கப்பட்டது..!




இந்த துப்பறியும் 'க்வாக்' சுந்தரம் குமுதம் தொடரை நண்பர் JCS ஜானி தனது ப்ளாக்கில் சில பக்கங்களை பதிவேற்றியுள்ளார்..! அதை பார்க்க...இங்கே 'கிளிக்'

பெயரிடப்படாத ஓவியர் செல்லத்தின் நகைசுவை துணுக்குகள் போலவே, அதே குமுதத்தில் அதே காலகட்டத்தில் மற்றொரு ஓவியரும் கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு வரைந்தார்..!



அந்த இன்னொரு ஓவியர் யார் என நம்மால் கண்டுபிடிக்க சிரமமாக இருந்தாலும்கூட...ஒரு சிறுவர் உலகஇலக்கிய ஜாம்பவான் எழுத்தாளர், சிறுவர்களை மயக்கும் ஓவியர் செல்லத்தின் வளைவுகளை மிக சரியாக இனம்கண்டு, தொடர்ந்து அவரை கவனித்து வந்து, சரியான சந்தர்ப்பத்தில் செல்லம் என்ற பெயருடன் அவரின் திறமையை இந்த உலகிற்கு அறிமுகபடுத்தினார்..!

ஓவியர்:செல்லம் என இந்த உலகிற்கு அறிமுகம் செய்த,சிறுவர் இலக்கிய ஜாம்பவான் வாண்டுமாமா அவர்கள்..! அப்படி அறிமுகம் துவங்கிய ஆண்டு 1972. இந்த ஆண்டை கொண்டாட்ட ஆண்டாக அறிவிக்கலாம், ஏனென்றால் முத்துகாமிக்ஸ் என்னும் மேற்கத்திய படைப்புகள் அணிவகுப்பு ஒருபுறம் என்றால்... தமிழர்களின் படைப்புகள் தாங்கிய கோகுலம் சிறுவர் இதழ் துவக்கம் மறுபுறம்..! 


இரண்டு பக்கத்தில் ஒரு குட்டி குறும்பு என பலே பாலுவின் ஹாஷ்யங்களை திரு செல்லம் ஓவியத்தின் மூலமாக, ஒரு சர்வதேச தரத்தில் உயிருட்டி, இன்றுவரையில் எல்லோர் மனதிலும் மறக்காத பாத்திரமாக உருவாக்கி மனங்களை கொள்ளைகொண்டார்..! 




வாண்டுமாமாவின் கற்பனை குதிரையின் புது பாய்ச்சலைவிட, ஓவியர் செல்லத்தின் ஓவியப் பாய்ச்சல் படு அட்டகாமாக வளைந்து, நெளிந்து மாயங்கள் செய்து மயக்கியது..! அந்த மயக்கி தள்ளிய ஓவியத்தை நீங்களே பார்த்து கொள்ளுங்களேன்..!

அவரின் கைகளில் மனித உருவங்கள் மட்டுமல்ல...எல்லா வகை ஜீவராசிகளும் சாகசங்கள் செய்து ஜாலம் செய்தன என்றால் அது மிகையல்ல..!அதற்கு 'நந்து சுந்து மந்து..!' என்னும் சித்திரதொடர் நல்ல உதாரணம்..!





எழுபதுகளின் ஆரம்பத்தில் இரும்புக்கை மாயாவிக்கு எப்படி ஒருபுறம் ரசிகர்கள் உருவானார்களோ..அதேபோலவே மறுபுறம் பலே பாலுவிற்கு இசிகர்கள் உருவானார்கள் என்பது நிதர்சனம்..! பலே பாலுவை வித்தியாசமான சிலாகிக்கும் கதைகளின் மூலமாக வாண்டுமாமா எழுத...ஓவியர் செல்லம் எகிறவைக்கும் உயிருட்டத்துடன் வரைந்து தள்ளினார்..! அப்படி வந்தவை தான் 'பலேபாலுவும் பாட்டில் பூதமும்..!'




இந்த கதையை படித்தவர்கள் வீட்டில் இருக்கும் ஒரு பழைய ஜாடியை ஒருமுறையேனும் திறந்துபார்த்திருப்பர்கள்..! அவ்வளவு சந்தோசங்களை, ஏக்கங்களை உண்டாகும் ஒரு கதை..! வாண்டுமாமாவையும் செல்லத்தையும் சித்திரக்கதை பிரியர்கள் தங்கள் மனதில் கொடுத்த இடம் வேறுயாருக்கும் கொடுப்பார்களா என்பது சந்தேகமே..!

ஓவியர் செல்லத்தின் அடுத்தகட்ட  பயணத்தை வரும் அடுத்த பதிவில் சொல்கிறேன். இங்கு ஒரு கருத்தை முன்வைக்க தோன்றுகிறது. உலகமயமாகிவிட்ட இன்றைய சூழ்நிலையில் நல்லவைகளை எந்த நாட்டவை என்றாலும்கூட தேடிபிடித்து, ரசிப்பது வரவேற்க்கபடவேண்டியவையே..! வெளிநாட்டு படைப்புகளை வெறியாய் ரசிக்க காட்டும் ஆர்வத்தில் கொஞ்சமேனும்,  நம் வாழ்கை முறையையும், கலாசாரத்தையும் மையமாக வைத்து வந்த இப்படிபட்ட படைப்பாளிகளையும், படைப்புகளையும் நாம் மறப்பதும், புதைந்துவிட விடுவதும், புதுப்பிக்க தவறுவதும் பார்க்க  வேதனையாக உள்ளது..!

ஏழரை கோடி தமிழர்களில், தமிழ் காமிக்ஸ் உலகம் சில ஆயிரம் தீவிர இரசிகர்களை மட்டுமே கொண்டு பலவீனமாக உள்ளது..பலவீனமாக உள்ளது.. என வேதனை தெரிவிக்கும் நம்மிடையே...சில நூறு பேர்களிடமாவது இந்த மாபெரும் கலைஞரின் கைவண்ணம் மீதமிருகிறதா என்பதே என் கேள்வி..!!!  

உங்கள் எண்ணங்களின் பகிர்வு தான்...வரும் பதிவின் வேகத்தையும் ஆழத்தையும் தீர்மானிக்கும்..காத்திருக்கும்...

நட்புடன்
மாயாவி.சிவா


Monday 7 September 2015

கௌபாய் உலகம் கமான்சே..!

வணக்கங்கள் நண்பர்களே..!

மனுசங்களுக்கு புதுவிஷயம் எதுமேல் திடீர்ன்னு  ஆர்வம் அதிகமாகுதோ...அந்த சப்ஜெக்ட் ஆரோக்கியமான போட்டியா...பல படைப்புகள் சவால் விட்டு கிளம்புற புரட்சி எல்லா காலகட்டத்துலையும், எல்லா விஷயத்திலையும் நடந்துட்டு தான் வருது. புதுசா ஒரு ஜீன்ஸ் வந்த... போட்டியா பலது, புதுசா ஒரு டிவி சேனல் வந்தா...போட்டியா பலது, புதுசா ஒரு கார் வந்தா அதுக்கு போட்டி பலது...என மக்களை எது கவர்ந்தாலும், அதுக்கு ஈடுகொடுக்க படைப்புகள் கொட்டுவது தவறாமல் நடக்கும் பரிணாமம்..!

அப்படித்தான் இங்க 1985 to 1990 வாக்கில் பல காமிக்ஸ்கள் படையெடுத்து..! அதேபோல ஐரோப்பாவில 1965 to 1975 ல காமிக்ஸ் படைப்புகளை நோக்கி ஒரு படையெடுப்பு நடந்தது..! அந்த டைம்ல வந்தவைகள் அதிஅற்புதமான படைப்புகள், கதைகள், ஓவியங்கள்..! அப்படி பிரான்ஸ்,பெல்ஜியம்ல உருவான, சரித்திரம் படைச்ச, காமிக்ஸ் உலகத்துல என்னிக்கும் பேசப்படும் கதாபாத்திரம்& ஓவியர்கள் டின் டின்,கேப்டன் டைகர்,XIII,லக்கிலுக்,கேப்டன் பிரின்ஸ்,ஆஸ்டின் அண்ட் ஒப்பிளிஸ்,கமான்சே,ரிப்போர்ட் ஜானி, சிக்பில் என நமக்கு தெரிந்தவை.

அன்று உருவான படைப்புக்கு நிகராக...அவர்களாலே இன்று உருவாக்கமுடியவில்லை என்பதே நிஜம்..! முதல் இடத்துல இருக்குற tintin,Asterix பக்கத்துல நாம போகமுடியலைன்னாலும்...இரண்டாம் இடத்துல இருக்குற William Vance[XIII],Jean Giraud[கேப்டன் டைகர்], hermann huppen[கேப்டன் பிரின்ஸ்,காமன்சே],Morris [லக்கிலுக்] இவர்களின் படைப்புகள் திரு விஜயன் அவர்களின் முயற்சி மூலமா நமக்கு கிடைச்சது பெரிய லக்..!
அதுவும் ஓவியர் ஹெர்மெனின் படைப்புகள், அவர் தேர்தெடுக்கும் கதைகளம் யாருடனும் ஒப்பிடவே முடியாது..! அவரோட ஓவியங்களின் பாணி மனிதர்களின் எல்லா உணர்வுகளை, நம் கற்பனைக்கே எட்டாத உலகின் கடைகோடியில் உள்ள பயங்கரமான சூழ்நிலைகளை அப்படியே கண்முன்னே விரித்து காட்டும் சந்திவாய்ந்தவை..! அவருடைய படைப்புக்கு சரியான தினி போட்டவர் கதாசிரியர் Greg (Michel Régnier)

இந்த இருவர் கூட்டணியில் வந்த மாபெரும் சூப்பர் ஹிட் ஹீரோஸ் ரெண்டு பேர். அவங்களை தெரியாத ஐரோப்பிய காமிக்ஸ் ரசிகர்களே கிடையாது. முதலிடத்தில் இருக்குற ஹீரோ கேப்டன் பிரின்ஸ்.அடுத்து 'கமான்சே'.இந்த இருவரும் இந்த மாதம் ஒருசேர வருந்திருப்பது, என்னை பொறுத்தவரையில் சரியான வேட்டை..!

முதலில் கேப்டன் பிரின்ஸின் 'சைத்தான் துறைமுகம்'....



1986 ம் வருடம்...வெளிஉலகம் பற்றிய அதிக தகவல்கள் தெரியாத, எழுத்துக்களாலும், ஒரு சில போட்டோகள், DD டிவி மூலமாக பார்த்த ஓரிரண்டு  காட்சிகள் தாண்டி...பனிகடல் பற்றிய தகவல் தெரியாத காலகட்டம்..! பனிமண்டலக்கோட்டைகிற முதல் பிரின்ஸ் கதையில...படுபயங்கர கந்தகமலைகுகைகளும், சதையை கிழிக்கும் குத்து பாறைகளும், உடலை ஊனமாக்கும் வாயுக்கள் கசியும்..முடிவேயில்லாத குகைபாதையும் என் வாழ்வில் முதல் முறையாக காமிக்ஸ் படங்களில் பார்த்திருந்த சமயம்...! 

அந்த மூச்சு மூட்டும் குகையின் சூடேகுறையாம...அதே நினைவுல இருந்தப்போ வந்த சைத்தான் துறைமுகத்தின் பயங்கர பனி காத்து...இப்ப நினைச்சாலும் ஊசியா எலும்புல குத்துறது..! அந்த 14 வயசுல படிச்ச கதை எனக்குள்ள தோணின கலர் கனவுவை, நான் என் கற்பனையில வரைஞ்ச  ஒரு கலர் ஆர்ட் என்றுமே மறக்கமுடியாத படைப்பு..! இன்று அதை எடுத்து பார்த்தபோது..நானா அதை வரைஞ்சேன்னு ஆச்சரியமா இருக்கு..!



அன்று வந்த பாக்கெட் சைஸ் புக்ல நமக்கு தெரிந்த, பிரபல மக்கன்பேடா சுவீட்ஸ் கொடுத்த நண்பரின் கடிதம் வந்திருப்பது ஒரு குட்டி செய்தி....




அடுத்து கமான்சே....

இந்த கமான்சேவுக்கும் முத்துகாமிக்ஸ்க்கும் ஒரு தொடர்பிருக்கு..! அது என்னனா...முத்துகாமிக்ஸும் கமான்சே தொடரும் ஏககாலத்துல, ஒரு மாதத்துல ஆரம்பிக்கபட்டது தான்...அந்த தொடர்பு..! ஆமாம் இரண்டுமே 1972ம் வருஷம்,ஜனவரி மாசத்துல தான் ஆரம்பிக்கபட்டது..! இந்த தொடர் முடிக்க கிட்டத்தட்ட இருபது வருஷம் ஆச்சி.ஆகஸ்ட்,2002 ம் வருடம் இதோட கடைசி பாகத்தை போட்டு முடிவு செஞ்சாங்க..!  

Hermann &Greg இருவர் கூட்டணியில் உருவான கடல் வாழ்க்கை,கௌபாய் வாழக்கை என சாகசவீரர்கள் கைகோர்த்து வலம்வரும் கேப்டன் பிரின்ஸ்,கமான்சே இரு படைப்பும் , அட்டகாசமான பொக்கிஷங்கள்..! மாதம் ஒன்று என தவறாமல் வரும் டெக்ஸ்,டைலான் டாக் கதைகளின் சிறந்தவை பத்துக்கு இரண்டு தேறும்..! ஆனால் ரெண்டு வருஷத்துக்கு ஒன்று என வந்த கமான்சே கதைகள் பார்த்து பார்த்து செதுக்கிற ரத்தினங்கள்..! அதை தொடரவா ? அல்லது நிறுத்திவிடலாமா ? என விளிம்பு நிலை நாயகர் பட்டியலில் முதல் பெயராக இந்த தொடரை திரு விஜயன் சேர்த்திருப்பது...கமான்சே கதைகளை சாத்விகமாய் ரசிக்கும் சிங்கங்களை சீண்டி பார்க்கவே ஒழிய, நீக்கிபார்க்க என எனக்கு தோன்றவில்லை..! 

இந்த தொடரோட ஓவியர்....


பல வெற்றி தொடரின் எழுத்தாளர்...


பதினைந்து பாக தொடரில், சேர்ந்தே பயணிக்கும் கதாபாத்திரங்களை நீங்கள் நினைவில் கொள்ள ஒரு அட்டவணை...

செயன்னீ,சிப்பாய்கள்,விவசாயிகள்...வெள்ளையர்கள்,கறுப்பர்கள்..என்று உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் வந்து ஒரு அணியாகத் திரள்வது வன்மேற்கில் ஒரு புதுமையான சங்கதியே அல்லதான்.அவர்களுடைய வாழ்க்கை முறை எளிமையானதாக இருந்தாலும் அங்கே சந்தோசத்துக்கும்,உல்லாசத்துக்கும் குறைவேதும் கிடையாது...துப்பாக்கிகளும் விஸ்கி பாட்டில்களும் அங்கே  பிரதானமாக மக்களுக்கு கடும் உழைப்பே முதன்மை இலட்சியம் ! அதுமாதிரியான கட்டமைப்புகளின் பட்டியலில் முக்கிய இடம்பிடிக்க போராடும் 666 பண்ணை சந்திக்கும் கஷ்டங்கள், பிரச்சினைகள் பற்றிய அருமையான தொடரே 'கமான்சே' என எடிட்டர் குறிப்பிட்டு துவங்கிய இந்தகதையின் முதல்  
 நான்கு தொடரின் கதை மறந்தவர்களுக்கு, மீண்டும் ஒருமுறை நான்கையும் படிக்க தூண்ட...கதைசுருக்கம்...





டைகரின் கதைகள் கூட உண்மையான கௌபாய் கதை அல்ல..! உண்மையான கௌபாய் உலகை நம் கண்முன்னே காட்டும் மெகா ஹெட் தொடர் 'கமான்சே' கதையே..! இப்படி ஒரு கதை இனி வரபோவதுமில்லை... இதுவரையில் இதுபோல் வந்ததுமில்லை..! வருடங்கள் பத்து உருண்டால் தான் நமக்கு பழசின் அருமை மெல்ல புரியவருகிறது..! சைன்ஸ் பிக்ஷன்,சூப்பர் பவர் ஹீரோக்கள்,மங்கா போல வெற்றிக்கொடிகட்டிய படைப்புகள் நோக்கி... நம் காமிக்ஸ் பயணம் தடம் மாறும்போது... இந்த கௌபாய் கதையின் அருமை உணர்ந்து படிக்கும்போது, மனதை நிச்சயம் ஏதோதோ செய்யும்..! மனதை புரட்டும்,எத்தனை முறை படித்தாலும் அலுக்காத இந்த கதையை...மி.ம. போலவே மொத்தமாய் பார்த்து ரசிக்க...நாம் மறுபதிப்பு போடுங்கள் என்ற முதல் கோரிக்கையே 2025 வருடம்தான் எடிட்டரின் முன் வைப்போம் என்பது என் கணிப்பு..!

இன்னும் பத்து வருடங்கள் கழித்து, இதை படிக்க தவறவிட்டவர்களுக்காகவே... கூடுதலாக இரண்டு காபிகள் வாங்க திட்டமிட்டு என் போக்கை நினைத்து..... ஹாஹா...நானே சிரிக்க ஆரம்பித்து விட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்...! இந்த தொடரின் அருமையை, என் முயற்சி கொஞ்சமேனும் உங்களுக்கு உணர்த்தியிருக்கும் என நம்புகிறேன்..! உங்கள் பிரதிகளை இப்போதிருந்தே பத்திரபடுத்த ஆரம்பித்துவிடுங்கள்..!

இனி வரும் காலங்களில் ஒர்ஜினல் அட்டைபடங்களே வரவாய்ப்புள்ளதால், அதன் பெரிய அளவின் படங்களை இங்கே போட்டு, எடிட்டர் அட்டையாக பெரிய அளவில் போடும்போது ஏற்படும் உணர்வை கெடுக்காது... மொத்தவரிசையையும் சின்னதாக போட்டுள்ளேன். அதேசமயம் ஒவ்வொரு கதையிலும் ஓவியர் ஒரு முக்கால் பக்கத்திற்கு அசத்தலான ஒரு சீன் பெரிய ஓவியமாக போட தவறுவதேயில்லை..! நான் ரசித்த பெரியசைஸ் படங்களை வரிசையாக பதிவிட்டுள்ளேன்..! பார்த்து ரசியுங்கள்...இந்த தொடரின் சிறப்பை உள்வாங்குங்கள்..! இடையில் ஏதும் தோன்றினால் கமெண்ட்ஸ் ப்ளிஸ்..!

நட்புடன்
மாயாவி.சிவா